Sunday, July 28, 2013

நானாக நானில்லை!

எப்படியோ ஒரு வழியாக அறைக்கு நடந்தே வந்து சேர்ந்திருந்தேன்! கை காலிலெல்லாம் பயங்கர வலி! தோள் பட்டையிலும்! நல்ல வேளை ஹெல்மெட் அணிந்திருந்ததால் தப்பித்தேன். சாலைத் திருப்பத்தில் திரும்பும்போது வேகமாக வந்த லாரியில் மோதியதில் இத்தனை காயங்களும், வலிகளும்!

என் மோட்டார் பைக் என்ன கதியாயிற்று என்று கூட பாராமல் எழுந்தோடி வந்துவிட்டேன்! சட்டையெல்லாம் கிழிந்து விட்டிருந்தது. வேறு சட்டை எடுத்துக் கொண்டு மீண்டும் போய் வண்டியை எடுத்து வர வேண்டும்! கூடவே மெக்கானிக்கையும் அழைத்துக் கொண்டு போனால் சேதம் எவ்வளவு என்று பார்த்து ரிப்பேர் செய்யவும் உடனே கொடுத்து விடலாம்!

அறை திறந்திருந்தது! என் அறை நண்பன் வந்துவிட்டிருக்கிறான் போலும்! அறைக்குள் அவனைக் காணவில்லை! குளியளறையிலிருந்து சத்தம் கேட்டது.

"சங்கர்.." என்று குரல் கொடுத்தேன். பதிலில்லை! மீண்டும் இரு முறை பலமாக அழைத்தேன். அப்போதும் பதிலேதும் இல்லை!

எனது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டேன். உடலெல்லாம் வலி வியாபித்திருந்தது! அவன் வெளியே வந்ததும் ஒரு குளியல் போட்டுவிட்டு உடைகள் மாற்றிக் கொண்டு போக வேண்டும்.

சிறிது நேரத்தில் தலையைத் துவட்டிக் கொண்டே வெளியே வந்தான் சங்கர்.
"எப்படா வந்தே..?" என்று கேட்டேன்.
காதில் வாங்காதவனாய் எங்கேயோ பார்த்தவாறு தலை துவட்டிக் கொண்டிருந்தான். அவன் எப்பொழுதுமே இப்படித்தான். ஏதேனும் சிந்தனையில் ஆட்பட்டுவிட்டால் அருகில் இருக்கும் ஆட்கள் கூடத் தெரியாது.

அவனுடைய போன் ஒலித்தது.

"ஹலோ. சொல்றா அருண்" என்றான்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. நான் இங்கே இருக்கிறேன். என்னிடம் பேசுவது போல யாரிடம் பேசுகிறான்? உற்றுக் கவனிக்கலானேன்.
"எப்போ..?" என்றான். அவன் கையிலிருந்த துண்டு நழுவியது.
பதற்றமடைந்தவாறே
"தோ.. இப்பவே வரேன்" என்று செல்போனை அணைத்துவிட்டு பரபரவென உடைகளை எடுத்து மாட்டினான்.
"டேய் சங்கர்! எங்கே இவ்ளோ வேகமா கெளம்புறே? ஏதும் பிரச்சினையா?" என்றேன்.
அதற்குள்ளாக வாசலைத் தாண்டிச் சென்று தனது வண்டியைச் சமீபத்திருந்தான்.

"ம்ம் வரட்டும் பிறகு பேசிக்கொள்ளலாம்" என்று நான் குளியலுக்குத் தயாரானேன். தலையெல்லாம் ஒரே வியர்வைச்  சகதி! ரிலாக்ஸாகக் குளித்துவிட்டு தலையைத் துவட்டியவாறே கண்ணாடி அருகே வந்தேன்.

அதில் என் பிம்பம் தெரியவில்லை!

எனக்கும் ஒரு வாசகர் கடிதம்

அன்புள்ள நாமக்கல் சிபி அவர்களுக்கு,
உங்கள் முன்னாள் வாசகன் எழுதுவது. என்னைப் பற்றி முதலில் கூறிக் கொள்கிறேன். என் பெயர் வத்லகுண்டு வாசுதேவன். சுருக்கமாக வ.வாசு என்று அழைப்பார்கள். இணையத்தில் ஒரு நாள் எதையோ தேடிக்கொண்டிருந்த பொழுது தங்கள் தளமான "பிதற்றல்கள்" வாசிக்க நேர்ந்தது. சுவாரசியம் மிகுந்ததாகப் படவே அன்று முதல் உங்கள் தளத்திற்கான சுட்டியை புக் மார்க் செய்து கொண்டு தினமும் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க என்பது கூட தவறு. சுவாசிக்க ஆரம்பித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்! 

உங்கள் எழுத்துக்களில் அப்படியொரு ரசனை, அப்படியொரு சுவாரசியம். தினந்தோறும் உங்கள் தளத்தைப் பார்வையிடாது என்னால் உறங்க முடியாது என்ற அளவிற்கு தங்கள் ரசினகாகிப் போயிருந்தேன். படித்தவற்றை நினைத்துப் பார்த்து அலுவலக நேரத்தில் திடீரென்று தனியாகச் சிரித்து சக அலுவலர்களின் விநோதப் பார்வைக்கும் ஆளாகியிருக்கிறேன்! 

இப்படியாக மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த என் வாழ்வில் திடீரென இடியாக இருந்தது ஒரு நாள்! அன்றிலிருந்து உங்கள் தளம் காணாமல் போயிருந்தது. என் வாழ்வே இருளடைந்து, வெற்றிடமாகி விட்டதாக உணர்ந்த நான், அன்றிலிருந்து பைத்தியமாகத் திரிந்து கொண்டிருந்தேன். நான் நானாகவே இருக்கவில்லை! கலங்கரை விளக்கம் காணாத கப்பல் போன்று தத்தளித்துக் கொண்டிருந்தேன். என்ன சார் ஆனது? ஏன் அப்படிச் செய்து விட்டீர்கள்? உங்கள் வாசகர்கள் மீது உங்களுக்கு கொஞ்சமேனும் இரக்கம் இருக்கவில்லையா? 

ம்ம்.சரிதான். உங்கள் சூழ்நிலை என்னவோ? யார் கண்டது! உங்களிடம் கோபித்துக் கொள்வதில் எவ்வித நியாயமும் இல்லைதான்! கடந்த நான்கைந்து ஆண்டுகளாக உங்கள் தளம் என்றேனும் காணக் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் ஏறாத கோவில் இல்லை! சுற்றாத பிரவுசிங்க் செண்டர்கள் இல்லை! இணைய இணைப்பே இல்லாத கணிணி என்றாலும் கூட முதலில் நான் பிரவுசரைத் திறந்து பிதற்றல்கள் தளத்திற்கான சுட்டியைக் கொடுத்துப் பார்ப்பதே என் வழக்கமாக இருந்தது. 

வான் பார்த்த நிலமாக வறண்டு கிடந்த மண் மீது கோன் பார்த்து கொட்டிய மழையாக இன்று மீண்டும் சிபி என்ற தளத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியதும் என்னையுமறியாமல் "ஹூர்ரே" என்று கத்தி விட்டேன். 
தங்கள் பழைய படைப்புகளை அங்கே காண இயலாவிடினும் கூட உங்கள் எழுத்துக்கள் என்ற ஒன்றை இனி தினமும் நான் வாசிக்கும் வசதி உள்ளதே என்ற பேருவகையில் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். 
இனி உங்களுக்கு வாரமொருமுறையேனும் மடல் வரையத் திட்டமிட்டிருக்கிறேன். ஆதலால் இதனை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் ஒரு அன்பான கட்டளையுடன்.
"மீண்டும் முன்பு போல் உங்கள் தளத்தை அழித்துவிட்டுச் சென்றுவிடாதீர்கள். எப்பொழுதும் எங்களுடன் தொடர்பில் இருங்கள் உங்கள் எழுத்துக்களின் வழியாக!"

இப்படிக்கு,
உங்கள் எழுத்துக்களின் வாயிலாக
வாழ்ந்து வரும்,
வத்லகுண்டு வாசுதேவன்! 

(யாரும் எழுதாட்டி என்ன? நமக்கு நாமே திட்டத்தின் படி நானே எழுதியது)

Monday, July 22, 2013

ஊதி (எ) விசில்



அவன் ஒரு நாள் தன் பெற்றோருடன் திருவிழாவிற்குச் சென்று வரும்போது விளையாடுவதற்கு நாலணா விலையில் உட்புறம் இலந்தைப் பழக் கொட்டை போடப்பட்ட விசில் ஒன்றை வாங்கி வந்திருந்தான். அன்று மாலை அவனுடன் விளையாட பக்கத்து வீட்டு ரமேஷ் வந்திருந்தான்.

அவன் வீட்டில் பெரிய மரக்கட்டில் ஒன்று தாழ்வாரத்தில் போடப்பட்டிருக்கும்! அதில்தான் அவன் பெரும்பாலும் பஸ் விளையாட்டு விளையாடுவது வழக்கம்! அன்று அவன் கையில் ஊதி (எ) விசில் இருப்பதைப் பார்த்த ரமேஷ் அவனை பஸ் விளையாட்டுக்கு அழைத்தான்.

அவன் சொன்னான். "சரி! நான்தான் கண்டக்டர்! நீ டிரைவர்"
ரமேஷ் : "ம்ம்! அப்போ டிரைவரே விசில் ஊதி வண்டியை நிறுத்துவார். பின் அவரே விசில் ஊதி வண்டியை ஸ்டார்ட் செய்வார்"
(ரமேஷுக்கு அந்த விசிலை வாங்கி ஊதிப் பார்க்க வேண்டும்)
அவன் : "அப்படியே ஆகட்டும். அப்போ நாந்தான் டிரைவர். நீ கண்டக்டர்"
ரமேஷ் :"அப்ப கண்டக்டர்தான் விசில் ஊதுவாராம் டிரைவர் வண்டியை ஓட்டுவாராம்"
அவன்:"அப்படின்னா முதல்ல சொன்ன மாதிரி நானே கண்டக்டர். நீ டிரைவர். ஆரம்பிக்கலாமா?"

சில நிமிடங்களுக்குப் பிறகு
ரமேஷ்: "நான் வெளாட்டுக்கு வரலை. வீட்டுக்குப் போறேன்"

அவனுக்கும், ரமேஷுக்கும் அப்போது ஆறு வயதுதான்.
அந்த அவன் யாரென்பது நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்!

Friday, July 19, 2013

குன்னுடையான் கதை!

அப்போதெல்லாம் எங்களூர் அன்னமார் கோவில் வளாகத்தில்தான் குன்னுடயான் கதை நடக்கும்! நான் சொல்வது என்னுடைய 6-7 வயது இருக்கும்போது.

வீட்டிலிருந்தே கோணிப்பையை கையோடு எடுத்துச் சென்றுவிடுவோம். தரையில் விரித்து அமர்ந்து கொள்ள. இரவு உணவை முடித்துவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்பினால் திரும்பிவர நள்ளிரவைத் தாண்டியிருக்கும்! இதுபோல ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் போல நடக்கும்! ஊர்ச்சந்தையை அடுத்து இந்த அன்னமார் கோவில் இருக்கும்!

கோவிலின் வெளியே பெரிய  குதிரை மீது அய்யனாரோ/கருப்பனாரோ கம்பீரமாக வீற்றிருப்பார்.

குன்னுடையான் கதை என்றால் பொன்னர் சங்கர் கதைதான்! கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு வேடமிட்டுக் கொண்டு கணீர்க்குரலில் பாடி நடிப்பார்கள்! உடுக்கையொலியும் பாடலுடன் சேர்ந்து ஒலிக்கும்! சிலிர்ப்பாக இருக்கும்!

இந்தக் கூத்தில் நடிப்பவர்கள் அனைவருமே சுத்தமாக இருந்து விரதம் இருந்து நடிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டதுண்டு! வருடம் தவறாமல் வீரப்பூர் சென்று வழிபடுவார்கள் என்றும் சொல்வார்கள்.

படுகளக் காட்சியென்று கடைசி நாளில் ஒரு காட்சி உண்டு. அன்று பார்வையாளர்கள் பலருக்கும் சாமி வரும்!


நாமக்கல்லுக்கு நாங்கள் குடிபெயர்ந்த சில வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டருகில் இருந்த பகவதி அம்மன் கோவிலில் அந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். ஓரிரு வருடங்கள் தினந்தோறும் பார்த்திருக்கிறேன்!



(நாமக்கல் மாட்டம் மணியனூரில் ஒரு அண்ணமார் கோவில் இருக்கிறது. அந்தக் கோவில் வளாகத்தில்தான் நான் இந்நாடகத்தை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்)

Sunday, July 14, 2013

தந்தி - என் நினைவுக் குறிப்பு!



நான் பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருந்த சமயம். ஒரு நாள் வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் எனக்கு ஒரு கடிதம் வந்திருப்பாக எங்கள் வீட்டில் கொடுத்தனர். கவரைப் பிரித்தேன். ஒரு வெள்ளைத் தாளில் எழுதப்பட்டிருந்த கடிதமும் அதனுள் மடித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து ரூபாய்த்தாளும் இருந்தது. எனது (+1,+2)நண்பன் நவலடியான் கோவையிலிருந்து எழுதியிருந்தான்.

கடிதத்தில் தனக்கு ஒரு தந்தி அனுப்புமாறும் அதில் அவசரமாகப் புறப்படு வருமாறு குறிப்பிடும்படியும் எழுதி இருந்தான். மேலும் அந்தத் தந்தி தனது பெற்றோரிடமிருந்து அனுப்பியதாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. ஏதேனும் பெண் பிள்ளைகள் விஷயத்தில் மாட்டிக் கொண்டானோ என்றெல்லாம் யோசித்துவிட்டு சரி இனி தாமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்து  தந்தி அலுவலகத்திற்குச் சென்றேன். வழக்கமான பாணியில் ஸ்டார்ட் இம்மீடியட்லி என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் முடித்து விட்டு அவனது தந்தை பெயரில் கையொப்பமிட்டு அனுப்பி விட்டேன்.

இரண்டொரு வாரங்கள் கழித்து நாமக்கல்லில் அவனைச் சந்தித்தேன். அப்படியென்ன பிரச்சினை என்று விசாரித்தேன். நகைப் பட்டறைப் பயிற்சிக்காக அவனை கோவை அனுப்பியிருக்கின்றனர். அவனோ வேண்டா வெறுப்பாகச் சென்றிருக்கிறான். தங்கள் அனுமதியின்றி அவனை ஊருக்கு அனுப்ப வேண்டாம் என்று தங்கள் உறவினர் வீட்டில் சொல்லி இருக்கின்றனர் அவனது பெற்றோர். அதனால் இந்த ஐடியாவை செயல் படுத்தி இருக்கிறான். முழுதாக சொல்லி முடித்ததும் "அட! இதை கடிதத்திலேயே எழுதித் தொலைப்பதற்கு என்ன? நான் என்னவோ ஏதோ என்று பதட்டப் பட்டேன்" என்று அவனிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டேன்!

இரண்டொரு வருடங்கள் கழித்து அவனது அண்டை வீட்டில் இருந்த இன்னொரு நண்பர் கபீர் முகம்மது(இவர் என்னுடன் பாலி டெக்னிக்கில் படித்த நண்பர், நவலடியான் மூலமாக அறிமுகமானவர்)வுடன் பேசிக்கொண்டிருந்த போது நவலடியானைப் பற்றி விசாரித்தேன். அவர்கள் தற்போது வீடு மாறிச் சென்று விட்டதாகவும் அவர்களுடன் அவ்வளவாகப் பேச்சு வார்த்தை இல்லை எனவும் சொன்னான். என்ன ஆச்சு என்று விசாரித்தேன். சில வருடங்களுக்கு முன்பு கோவையில் இருந்த அவனை யாரோ போலித் தந்தி கொடுத்து வரவைத்ததாகவும்,அந்த வேலையைச் செய்தது இவன்தான்(கபீர் முகம்மது) செய்ததென்று நினைத்து நவலடியானின் அம்மா இவனைத் திட்டியதாகவும் கூறினான்.  அடப்பாவி! அதைச் செய்தது நானாச்சே! நீ மாட்டிக் கொண்டாயா என்று கேட்டுவிட்டுச் சத்தமாகச் சிரித்தேன்!