Thursday, April 2, 2015

சின்ன வயசுலே ரொம்பச் சின்ன வயசுலே...!

ரொம்ப நாள் கழிச்சி மீண்டும் வலைப்பூவில் எழுதுகிறேன். டச் விட்டுப் போனதில கொஞ்சம் ஆங்காங்கே ஜெர்க் ஆகலாம். மனிதாபிமானத்தோட மன்னிச்சிட மக்கழே!

*****************************************************************************

கிபி..1980 மணியனூர், நாமக்கல் மாவட்டம்.

எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து எனக்கு கிடைச்ச முதல் ஃபிரண்ட் ஸ்ரீதர். அவனோட அப்பா ஒரு போஸ்ட் மாஸ்டர். அவங்க வீட்டுலயேதான் போஸ்ட் ஆஃபீசும். அவங்க வீட்டு வாசலுக்கு ரெண்டு பக்கமும் பெரிய திண்ணைகள். இடது புறம் இருக்கும் திண்ணைல ஒரு பெரிய மரத்தாலான மேசை இருக்கும். போஸ்ட் ஆபீஸ் மேசை. நல்ல கனமா இருக்கும். ஒரு பக்கம் கப்போர்ட் வெச்சது. மறுபுறம் அடில காலியா இருக்கும். அதுதான் எங்களுக்கு(எனக்கும் ஸ்ரீதருக்கும்) கார்.

லீவு நாட்களில் அங்கேதான் விளையாடுவோம். டக் டக் என்று காரின் கதவுகளை திறந்து மூடும் சப்தங்கள் எல்லாம் பிரசாத் ஸ்டுடியோ இல்லாமலே எங்கள் வாயாலேயே டப்பிங்க் செய்து கொள்வோம்.

இந்த விளையாட்டு எவ்ளோ நாள் விளையாண்டாலும் எங்களுக்குப் போரடிச்சதில்லை. இருப்பினும் எங்களுக்கு ஒரு நாள் திடீர்னு புது விளையாட்டு கிடைச்சது.

திண்ணை மேல இருந்து தண்ணீர் சேந்தும்(கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும்) விளையாட்டு. ஒருத்தர் திண்ணைக்குக் கீழே படுத்துக்கணும். திண்ணை மேலிருந்து ஒருத்தர் தண்ணீர் இறைக்கணும். அப்போ கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துட்டு ஐயய்யோ கிணத்துக்குள்ளே பொணம் கிடக்குதுன்னு கத்திகிட்டு ஓடணும்.

சில நாட்கள் நான் பிணமாகவும் சில நாட்கள் அவரு பிணமாகவும்னு மாறி மாறி விளையாடுவோம். ஒரு முறை சந்தைல இருக்கும் பொதுக் கிணற்றில் பிணம் மிதக்குதுன்னு ஊர் பூரா பேசிகிட்டத்தைக் கவனிச்ச சிறுசுங்க மனசுல விசுவலைஸ் பண்ணி உருவாக்கின விளையாட்டு இது.

அப்புறம் அப்படி இப்படின்னு என்னைப் பால்வாடில சேர்த்து விட்டாங்க. ஸ்ரீதர் ஒண்ணாவது. நான் பால்வாடி. அவரு என்னை விட ஒரு வருஷம் சீனியராம். எனக்கு அந்தப் பால்வாடில இருக்குற ஆயாவைக் கண்டா எப்படி இருக்குமோ தெரியாது.. வீல்னு கத்திகிட்டே பின்னங்கால் பிடறி பட ஓடியாந்துடுவேன்.


ஒரு வேளை குழந்தையா இருந்தப்போ நான் குறும்புகள் செய்யும்போது பால்வாடி ஆயாகிட்டே பிடிச்சிக்குடுத்துவோம்ணு பயமுறுத்தி வெச்ச விளைவுகளா இருக்கலாம். இப்போ நினைச்சா பாவமா இருக்கு. அஞ்சலிப் பாப்பாவை அணுக முயற்சிக்கும் ரேவதியா உணர்ந்திருப்பாங்களோன்னு.

எவ்ளோ முயற்சி பண்ணியும் என்னை பால்வாடில உக்கார வெக்க முடியலை. நாலைஞ்சு பேரு சேர்ந்து கையை ரெண்டு பேர் காலை ரெண்டு பேர் எல்லாம் பிடிச்சிப் பால் வாடில கொண்டுபோயி விட்டுட்டு வந்தாக் கூட அவங்க வந்து சேர்வதற்குள் நான் திரும்ப வந்து சேர்ந்திருப்பேன்.

சரிதான் இவனுக்கும் பால்வாடிக்கும் ஸ்நானப் ப்ராப்திகூட இல்லைபோலன்னு எங்கப்பா என்னை ஒண்ணாம் வகுப்புல போயி உக்கார வெச்சாரு. எங்கப்பாதான் அந்த ஸ்கூல்ல(ஆர்.சி.துவக்கப்பள்ளி, மணியனூர்) தலைமை ஆசிரியர். புலி அட்டைப் படம் போட்ட தமிழ் புக்கும் ஒரு ஸ்லேட்டும் ஒரு மஞ்சப் பைல போட்டு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வெச்சாங்க. பக்கத்து வீட்டில் இருக்கும் சந்தை வாட்ச்மேனோட பொண்ணு சம்பூர்ணாக்காதான் முத முதல்ல ஸ்கூலுக்கு போறே, கோயிலுக்கு போயிட்டு போலாம்னு விபூதியெல்லாம் பூசி அனுப்பி வெச்சாங்க. அப்போ எனக்கு தெரியாது இது அஃபிஷியல் அட்மிஷன் இல்லை. ஒப்புக்குச் சப்பாணின்னு.


.... தொடரும்.