Thursday, August 8, 2013

வளஞ்செய்கின்றன!

இந்த வளஞ்செய்கின்றன  என்ற வார்த்தைக்குப் பின்னால் ஒரு பிளாஷ் பேக் இருக்கு!
நான் நாலாம்பு அட்மிஷனுக்கு நாமக்கல் டவுன் இஸ்கூலுக்கு வந்தப்போ கிராமத்துல படிச்ச பையன் சரியா படிக்க மாட்டான்  என்று சொல்லி எங்க இருதய மேரி டீச்சர் தன வகுப்புல சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.  இத்தனைக்கும் என் அம்மா, என் அப்பா இருவருமே அதே நிர்வாகத்தின் பள்ளியில் ஆசிரியர்கள். நான் சேர வந்த டவுன் இஸ்கூலுக்குத்தான் அன் அம்மாவுக்கும் டிரான்ஸ்பர் ஆகி இருந்தது. சக டீச்சரோட பையன் என்று கூட பார்க்காம எங்க டீச்சர் தன்னுடைய குவாலிட்டில கறாரா இருந்தாங்க. 

இருப்பினும் டவுன் இஸ்கூலின் தலைமை ஆசிரியர் சத்தியநாதன் அவர்கள் கொஞ்ச நாளுக்கு உங்க கிளாஸ்ல இருக்கட்டும். அதன் பிறகும் பையன் தேறலைன்னா வேற கிளாஸ்க்கு மாத்தி விடுறேன் என்று சமாதானப் படுத்தி அனுப்பி வெச்சார்

நான் சேர்ந்த இரண்டாம் நாளோ அல்லது மூன்றாம் நாளோன்னு நினைக்கிறேன். சேர்த்து எழுது என்ற பகுதியில் வளம் + செய்கின்றன  இதுக்கு விடை என்ன வரும்னு கேட்டாங்க. வகுப்பே முழிச்சது. அவங்க பார்வைல நல்லாப் படிக்கும் நகரத்துப் பசங்ககிட்டே எல்லாம் கேட்டாங்க. எவனுக்கும் தெரியல. நான் தானா முன்வந்து கையை உயர்த்தினேன்,
எங்கே சொல்லு பார்க்கலாம் என்று சொன்னாங்க "வளஞ்செய்கின்றன" என்றேன். வெரிகுட் என்று என்னைப் பாராட்டி பசங்க அத்தனை போரையும் கை தட்டச் சொன்னாங்க.


அடுத்த வாரத்தில் ஒரு நாள் துணிக் கடைக்கு ஆங்கிலத்தில் என்ன  என்று ஒரு கேள்வியைக் கேட்டுட்டாங்க. அதே போல அத்தனை பசங்களும் முழிக்க என் ஞாபகச் செல்களை உசுப்பி விட்டேன். திருச்செங்கோடு கடைவீதியில் அப்பாவின் கை பிடித்துக் கொண்டு நடந்த நாட்கள் நினைவில் வந்தது. அப்போவெல்லாம் வேடிக்கை பார்க்கும்போது கடையின் பெயர்ப்பலகைகளை படித்துக் கொண்டே போவது வழக்கம். பல கடைகளின் பெயர்களை ஆங்கிலத்தை தமிழில் எழுத்தில் இருப்பார்கள். அப்படி ஒன்றை படித்த பெயர் சட்டென நினைவில்  வந்தது "முருகன் கிளாத் ஸ்டோர்".

இன்றும் நானாக கையை உயர்த்தினேன். முதல் ஆளாக. "கிளாத் ஸ்டோர்" என்ற விடையைச்  சொல்லி   கைதட்டு வாங்கினேன். அதன் பிறகு தலைமை ஆசிரியடம் சென்று வேறு வகுப்புக்கு மாற்ற வேண்டாம், என் கிளாசிலேயே இருக்கட்டும் என்று தக்க வைத்துக் கொண்டார்கள் வகுப்பின் முதல் மாணவனை. 

Friday, August 2, 2013

காட்டு வழிப் பாதை!


"சேகர்! கவனமாகக் கேள்! இரவு 12.33 மணிக்குள் நீ அவ்விடத்தைக் கடந்துவிட்டிருக்க வேண்டும்! ஒரு நொடி தாமதித்தாலும் இக்குறிப்பிட்ட நட்சத்திரம் முடிந்துவிட்டிருக்கும்! பிறகு தீயசக்திகளின் ஆதிக்கம் உன்னைப் பீடிக்கத் துவங்கி விடும்! புரிகிறதா?"

"புரிகிறது சுவாமி!" என்றான் சேகர். முகம் முழுக்க திகில் படர்ந்திருந்தது.

ஜடாமுடியுடன் அமர்ந்திருந்த அந்த மனிதர் தன் இருப்பிடத்திலிருந்து எழுந்தார்.  கூரிய விழிகளால் சேகரின் முகத்தை உற்று நோக்கியவாறு தன் கையில் இருந்த ஒரு யந்திரத்தை சேகரிடம் நீட்டினார்.

"இதனை வைத்துக் கொள்! துணையாக இருக்கும். நினைவில் இருக்கட்டும்! 12.33 ஒரு நொடியும் தாமதிக்கலாகாது! எச்சரிக்கை".

........

ஊய் ஊய் என்ற பலத்த காற்றைக் சமாளித்தவாறே அந்த காட்டுப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தான் சேகர். புழுதி பறந்து கண்களை வேறு மறைத்தது! கும்மிருட்டில் தன் மொபெட்டின் குறைவான வெளிச்சத்தில் பாதையைக் கண்டுபிடித்து வாகனத்தை விரட்டிக் கொண்டிருந்தான். அவ்வப்போது வெட்டிய மின்னலும் இவனுக்கு வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது!

கைக்கடிகாரத்தைப் பார்த்தான். 12.15! இன்னும்  கால் மணி நேரமே இருக்கிறது, ஆக்ஸிலேட்டரை முறுக்கி வேகத்தை அதிகப் படுத்தினான். கரடு முரடான ஒற்றையடிப் பாதையில் மொபெட் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தது.a

ஏதோ ஒரு பெரிய கல்லின் மேல் வண்டி ஏறி இறங்கியது போலிருந்தது. அத்துடன் மொபெட்டின் எஞ்சின் உயிரிழந்து வண்டியின் வேகம் அப்படியே குறைந்து மெதுவே தன் ஓட்டத்தினை நிறுத்திக் கொண்டது.

"ச்சே! இது என்ன புது சோதனை?"

மணி பார்த்தான்! 12.23! இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன! அதற்குள் கடக்க வேண்டும்! எவ்வளவு தொலைவென்று இருட்டில் கணக்கிட முடியவில்லை!

இதயம் குப் என்று அடைத்துக் கொண்டது. நாக்கு வறண்டு விட்டிருந்தது.

"பிரதர்! ஏதும் பிரச்சினையா?"  திடுக்கிட்டுத் திரும்பினான்.
இருட்டில் மசமசப்பாக உருவம் தெரிந்தது. அப்பொழுது தோன்றிய மின்னல் வெளிச்சத்தில் மனித உருவம்தான் என்று தெரியவர கொஞ்சம் நிம்மதியானான்.

அதற்குள் அவனாகவே மொபைட்டை வாங்கி இரண்டே உதையில் இஞ்சினை உயிர்ப்பித்தான்.
"பிரதர்! நீங்க பதட்டமா இருக்கீங்கன்னு நினைக்கிறென்! உக்காருங்க! வண்டியை நான் ஓட்டுறேன்"
ஒன்றும் பேசத் தோன்றாமல் எதற்கோ கட்டுப்பட்டவன் போல் பின்னால் ஏறி அமர்ந்தான் சேகர்.

இந்தக் காட்டுப் பாதையில் பழக்கப் பட்டவன் போல லாவகமாக அதே சமயம் இவனின் எண்ணம் அறிந்தாற்போல் வேகமாகவும் வண்டியை முடுக்கிக் கொண்டிருந்தான் அவன்.

எவ்வளவு தொலைவு கடந்திருப்பார்கள் என்று தெரியவில்லை! தன்னிச்சையாக கைக்கடிகாரத்தைப் பார்த்தான். 12.30!
"ஐயோ! இன்னும் மூன்றே நிமிடங்கள்"

வண்டி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.
தொலைவில் இலேசான வெளிச்சத்தில்  பாதையின் முடிவு தெரிந்தது!
ஆ! அதோ! இன்னும் சில மீட்டர்கள்தான்! அடைந்துவிடலாம்! அவர் சொன்ன எல்லையைக் கடந்துவிடலாம்!

12.32!
இவன் எண்ணி முடிப்பதற்குள் எல்லையைத் தொடும் ஒன்றிரண்டு அடிகளுக்கு முன்னால் சட சடவென ஒரு மரம் முறிந்து விழுந்து பாதையை மூடிக் கொண்டிருந்தது. வண்டியை அந்த இடத்திலேயே நிறுத்தினான் அவன்!

ஐயோ! சோதனையின் உச்ச கட்டம் இது! ஒரு நிமிடத்திற்குள் அவ்விடத்தைக் கடந்தாக வேண்டும்!

12.32.20!

"கவலைப் படாதீங்க பிரதர்! மரத்தைத் தூக்கிப் போட்டுட்டு போயிக் கொண்டே இருக்கலாம்!"

"என்ன உளறுகிறான் இவன்! பத்து பேர் சேர்ந்தாலும் தூக்கச் சாத்தியமில்லாத மரமல்லவா முறிந்து கிடக்கிறது! இறங்கி ஓட வேண்டியதுதான்" என எண்ணிக் கொண்டே வண்டியைப் பற்றிக் கவலை கொள்ளாது எல்லையை நோக்கி கண் மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தான் சேகர்!

மரத்தின் அருகாமையை அடைந்தபோதுதான் கவனித்தான். மரம் மெல்ல மெல்ல மேலெழுந்து கொண்டிருந்தது! வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தவன் பத்தடி தொலைவிற்கு அப்பாலிருந்தே தன் கையை நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈட்டி அம்மரத்தை அப்புறப் படுத்திக் கொண்டிருந்தான்!